மூன்றாவது தங்கக்கவசதினுள் மம்மியாக்கப்பட்ட டுத்தாங்கமென்
வெளிப்பட்டார்.அவரது உடலை மூன்று அடுக்குகளான நீளமான துணியால்(பேன்டேஜ்)
சுருட்டிவைக்கபட்டிருந்தது.மெதுவாக அந்த துணியை உடலிலிருந்து பிரித்தெடுக்க
ஆரம்பித்தனர்.பிரிக்க பிரிக்க தங்க,வைர ஆபரணங்கள் வெளிப்பட்டு கொண்டிருந்ததை கண்டு
தொல்லியல் நிபுணர்கள் மிரண்டுபோயினர்.2௦௦ கும் மேற்பட்ட நகைகள் டூட்டின் உடல் மீது
இருந்ததாக கார்ட்டர் பின்னர் அறிவித்தார்.இந்த நகைகளை பிரித்தெடுக்கும்
போதும்,பெட்டியிலிருந்து எடுக்கும் போதும் மன்னரின் உடல் பல இடங்களில்
சேதமடைந்தது.எடுத்துக்காட்டுக்கு சொல்லவேண்டுமென்றால்,கையிலிருந்த ப்ரேஸ்லெட்டை
எடுக்கும்போது அந்த கை துண்டானது,அதே போல் பல ஆண்டுகளானதால் உடல் நன்றாக
பெட்டியுடன் ஒட்டியிருந்தது,கத்தியால் கிழித்து எடுக்கும்பொழுது முதுகு பகுதி
பாதிக்கப்பட்டது.ஒருவழியாக அவரது உடலை வெளியே எடுத்து 33௦௦ ஆண்டுகளாக நிம்மதியாக
தூங்கிக்கொண்டிருந்தவரை ஆராய்ச்சி என்ற பெயரில் குதற ஆரம்பித்தனர்.
![]() |
| டூட்டின் உடலுடன் கார்ட்டர் |
ஆனால் பல
அபூர்வதகவல்கள் இதன்மூலம் கிடைத்ததென்னவோ உண்மைதான்.வெளியே எடுக்கப்பட்ட டூட் 5.5
அடி உயரம் இருந்தார்,தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது,உறுதியான
எலும்பும்,பற்களையும் வைத்து இவர் இளைஞராயிருக்கும் போதே இறந்திருக்கலாம்
கணிக்கப்பட்டு,பிறகு பதினெட்டு அல்லது பத்தொன்பதாவது வயதில் இறந்ததாக
உறுதிசெய்யப்பட்டது.கல்லறையில் கிடைத்த சுவடுகளை வைத்து மன்னரின் வரலாறு ஒருவாறாக
அனுமானிக்கப்பட்டது.இவரின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் முன் Mummification
எனப்படும் உடலை பதப்படுத்தும் முறையை அறிந்துகொள்வோம்.
மன்னரோ,பெரிய
செல்வந்தரோ இறந்துவிட்டால் மறுஜென்மத்தில் அவர்களின் ஆன்மா இதே உடலோடு வாழ்வதற்கு,இறந்தவரின்
உடலை கெடாமல் பதபடுத்தி பாதுகாக்கும் முறையை பின்பற்றி வந்துள்ளனர் அக்கால
எகிப்தியர்கள்.இப்பணி கைதேர்ந்த மருத்துவர்களால் செய்யப்படும்.டூட் மன்னர்
இறந்தபின் அவரை பதப்படுத்தும் பணி 70 நாட்கள் நடந்துள்ளது.
முதலில் அவரது உடலிலிருந்து
நுரையீரல்(lungs),கல்லீரல்(liver),குடல் மற்றும் மூளை ஆகியவற்றை
எடுக்கப்படும்.காரணம் இவை உடலினுள் இருந்தால் மொத்த உடலையும் கெட்டுப்போக செய்யும்
வாய்ப்புகள் அதிகம்.இதில் விஷேசம் என்னவென்றால் மூளையை வெளியே எடுத்த விதம்
தான்,ஏனெனில் டூட்டின் உடலை ஆராயும்போது தலையில் எந்த பாதிப்பும் இல்லாமல்
இருந்தது,பின் எப்படி மூளையை எடுத்தார்கள்..?! கொக்கி போன்ற சிறிய கம்பியை
மூக்கின் வழியாக நுழைத்து,மூளையை குழைத்து வெளியே எடுத்துள்ளனர்.ஆனால் இதயத்தை
மட்டும் அப்படியே விட்டுவிட்டனர்.ஏனெனில் உடலின் மொத்த இயக்கம்,சிந்தனை,ஞாபகம்
போன்றவை இதயத்தை சார்ந்தது என்று அவர்கள் நம்பினர்,இவையெல்லாம் இதயத்தின் செயல்
அல்ல மூளையின் செயல் தான் என்று அவர்களின் மூளைக்கு எட்டவில்லை போலும்.வெளியே
எடுத்த இந்த உறுப்புகளை எல்லாம்(மூளையை தவிர) பத்திரமாக ஒரு ஜாடியில் போட்டு மூடி
வைக்கப்படும்.இதன்
பிறகு உடலை,வேதிபொருளான நேட்ரான்(Natron) எனும் உப்பை தடவி நாற்பது நாட்கள் நன்றாக
உலறவைத்துவிடுவார்கள்.
இதன் மூலம் உடல் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படாமல் இருக்கும்.நாற்பது நாட்களுக்கு பின் உடல் உலர்ந்த திராட்சை போல சுருங்கிவிடும்,பிறகு எண்ணையில் நனைத்த துணியால் உடம்பினுள் வைத்து திணிக்கப்படும்(சோளக்காட்டு பொம்மையில வைக்கோல் வைப்போமே அப்படி).பின் நீளமான துணியால் உடலை நன்றாக சுற்றி வைத்துவிடுவார்கள்.இதன்பின் உடலை சவப்பெட்டியில் வைத்து மன்னரின் முகம் பதித்த கவசதினால் உடல் மூடப்பட்டது.
கி.மு 1341 ம் ஆண்டு மன்னர் அகேநேடன்(Akhenaten)-கியா(Kiya) (இரண்டாவது
மனைவி) தம்பதிக்கு டுத்தாங்கமென் பிறந்தார். டுத்தாங்கமெனின் இயற்பெயர்
டுத்தாங்கேடன் ஆகும்(மன்னரான பின் இவர் தன் பெயரை டுத்தாங்கமென் என மாற்றி
கொண்டார்,’ஆமென்’ என்பது சூரியகடவுளை குறிக்கும்).அவர் பிறந்தபோது எகிப்திற்கு
அப்படியொன்றும் பொற்காலம் இல்லை.டூட்டின் தந்தை அகேநேடன் 18வது ராஜவம்சத்தின் 11ம் மன்னராக பொறுப்பேற்று ஆண்டுவந்தார்.மதம் சார்ந்த இவரது நடவடிக்கைகள் மக்களிடம்
வெறுப்பை சம்பாதித்தன.ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றி வந்த மத நம்பிக்கைகளை இவர்
எதிர்த்தது மட்டுமின்றி குலதெய்வமான சூரிய கடவுளின் கோவிலையும் இடித்துவிட்டார்..மனிதர்
இதோடு நின்றிருக்கலாம்.இனி நான் தான் கடவுள்,என்னை தான் அனைவரும் வணங்க வேண்டுமென
ஆணையிட்டு தனக்கு தானே ஒரு கோவிலையும்
கட்டிக்கொண்டார்.இதனால் அகேநேடன் ‘மதத்தீவிரவாதி’ என்று மக்களால் அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்பாராமல்
கிடைத்த அரியணை..மர்மமான முறையில் டூட் மரணம்..அடுத்த பதிவில் தொடரும்...
**எழுத்து: மணி மாணிக்கம்**










