Wednesday, October 30, 2013

கல்லறைக்குள் உலகம்:THE MUMMY (Part 3)

மூன்றாவது தங்கக்கவசதினுள் மம்மியாக்கப்பட்ட டுத்தாங்கமென் வெளிப்பட்டார்.அவரது உடலை மூன்று அடுக்குகளான நீளமான துணியால்(பேன்டேஜ்) சுருட்டிவைக்கபட்டிருந்தது.மெதுவாக அந்த துணியை உடலிலிருந்து பிரித்தெடுக்க ஆரம்பித்தனர்.பிரிக்க பிரிக்க தங்க,வைர ஆபரணங்கள் வெளிப்பட்டு கொண்டிருந்ததை கண்டு தொல்லியல் நிபுணர்கள் மிரண்டுபோயினர்.2௦௦ கும் மேற்பட்ட நகைகள் டூட்டின் உடல் மீது இருந்ததாக கார்ட்டர் பின்னர் அறிவித்தார்.இந்த நகைகளை பிரித்தெடுக்கும் போதும்,பெட்டியிலிருந்து எடுக்கும் போதும் மன்னரின் உடல் பல இடங்களில் சேதமடைந்தது.எடுத்துக்காட்டுக்கு சொல்லவேண்டுமென்றால்,கையிலிருந்த ப்ரேஸ்லெட்டை எடுக்கும்போது அந்த கை துண்டானது,அதே போல் பல ஆண்டுகளானதால் உடல் நன்றாக பெட்டியுடன் ஒட்டியிருந்தது,கத்தியால் கிழித்து எடுக்கும்பொழுது முதுகு பகுதி பாதிக்கப்பட்டது.ஒருவழியாக அவரது உடலை வெளியே எடுத்து 33௦௦ ஆண்டுகளாக நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தவரை ஆராய்ச்சி என்ற பெயரில் குதற ஆரம்பித்தனர்.
டூட்டின் உடலுடன் கார்ட்டர்
ஆனால் பல அபூர்வதகவல்கள் இதன்மூலம் கிடைத்ததென்னவோ உண்மைதான்.வெளியே எடுக்கப்பட்ட டூட் 5.5 அடி உயரம் இருந்தார்,தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது,உறுதியான எலும்பும்,பற்களையும் வைத்து இவர் இளைஞராயிருக்கும் போதே இறந்திருக்கலாம் கணிக்கப்பட்டு,பிறகு பதினெட்டு அல்லது பத்தொன்பதாவது வயதில் இறந்ததாக உறுதிசெய்யப்பட்டது.கல்லறையில் கிடைத்த சுவடுகளை வைத்து மன்னரின் வரலாறு ஒருவாறாக அனுமானிக்கப்பட்டது.இவரின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் முன் Mummification எனப்படும் உடலை பதப்படுத்தும் முறையை அறிந்துகொள்வோம்.
மன்னரோ,பெரிய செல்வந்தரோ இறந்துவிட்டால் மறுஜென்மத்தில் அவர்களின் ஆன்மா இதே உடலோடு வாழ்வதற்கு,இறந்தவரின் உடலை கெடாமல் பதபடுத்தி பாதுகாக்கும் முறையை பின்பற்றி வந்துள்ளனர் அக்கால எகிப்தியர்கள்.இப்பணி கைதேர்ந்த மருத்துவர்களால் செய்யப்படும்.டூட் மன்னர் இறந்தபின் அவரை பதப்படுத்தும் பணி 70 நாட்கள் நடந்துள்ளது.
முதலில் அவரது உடலிலிருந்து நுரையீரல்(lungs),கல்லீரல்(liver),குடல் மற்றும் மூளை ஆகியவற்றை எடுக்கப்படும்.காரணம் இவை உடலினுள் இருந்தால் மொத்த உடலையும் கெட்டுப்போக செய்யும் வாய்ப்புகள் அதிகம்.இதில் விஷேசம் என்னவென்றால் மூளையை வெளியே எடுத்த விதம் தான்,ஏனெனில் டூட்டின் உடலை ஆராயும்போது தலையில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது,பின் எப்படி மூளையை எடுத்தார்கள்..?! கொக்கி போன்ற சிறிய கம்பியை மூக்கின் வழியாக நுழைத்து,மூளையை குழைத்து வெளியே எடுத்துள்ளனர்.ஆனால் இதயத்தை மட்டும் அப்படியே விட்டுவிட்டனர்.ஏனெனில் உடலின் மொத்த இயக்கம்,சிந்தனை,ஞாபகம் போன்றவை இதயத்தை சார்ந்தது என்று அவர்கள் நம்பினர்,இவையெல்லாம் இதயத்தின் செயல் அல்ல மூளையின் செயல் தான் என்று அவர்களின் மூளைக்கு எட்டவில்லை போலும்.வெளியே எடுத்த இந்த உறுப்புகளை எல்லாம்(மூளையை தவிர) பத்திரமாக ஒரு ஜாடியில் போட்டு மூடி வைக்கப்படும்.இதன் பிறகு உடலை,வேதிபொருளான நேட்ரான்(Natron) எனும் உப்பை தடவி நாற்பது நாட்கள் நன்றாக உலறவைத்துவிடுவார்கள்.


இதன் மூலம் உடல் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படாமல் இருக்கும்.நாற்பது நாட்களுக்கு பின் உடல் உலர்ந்த திராட்சை போல சுருங்கிவிடும்,பிறகு எண்ணையில் நனைத்த துணியால் உடம்பினுள் வைத்து திணிக்கப்படும்(சோளக்காட்டு பொம்மையில வைக்கோல் வைப்போமே அப்படி).பின் நீளமான துணியால் உடலை நன்றாக சுற்றி வைத்துவிடுவார்கள்.இதன்பின் உடலை சவப்பெட்டியில் வைத்து மன்னரின் முகம் பதித்த கவசதினால் உடல் மூடப்பட்டது.
டுத்தாங்கமெனின் வரலாறு:

கி.மு 1341 ம் ஆண்டு மன்னர் அகேநேடன்(Akhenaten)-கியா(Kiya) (இரண்டாவது மனைவி) தம்பதிக்கு டுத்தாங்கமென் பிறந்தார். டுத்தாங்கமெனின் இயற்பெயர் டுத்தாங்கேடன் ஆகும்(மன்னரான பின் இவர் தன் பெயரை டுத்தாங்கமென் என மாற்றி கொண்டார்,’ஆமென்’ என்பது சூரியகடவுளை குறிக்கும்).அவர் பிறந்தபோது எகிப்திற்கு அப்படியொன்றும் பொற்காலம் இல்லை.டூட்டின் தந்தை அகேநேடன் 18வது ராஜவம்சத்தின் 11ம் மன்னராக பொறுப்பேற்று ஆண்டுவந்தார்.மதம் சார்ந்த இவரது நடவடிக்கைகள் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தன.ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றி வந்த மத நம்பிக்கைகளை இவர் எதிர்த்தது மட்டுமின்றி குலதெய்வமான சூரிய கடவுளின் கோவிலையும் இடித்துவிட்டார்..மனிதர் இதோடு நின்றிருக்கலாம்.இனி நான் தான் கடவுள்,என்னை தான் அனைவரும் வணங்க வேண்டுமென ஆணையிட்டு  தனக்கு தானே ஒரு கோவிலையும் கட்டிக்கொண்டார்.இதனால் அகேநேடன் ‘மதத்தீவிரவாதி’ என்று மக்களால் அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்பாராமல் கிடைத்த அரியணை..மர்மமான முறையில் டூட் மரணம்..அடுத்த பதிவில் தொடரும்...
                   **எழுத்து: மணி மாணிக்கம்** 




Tuesday, October 22, 2013

கல்லறைக்குள் உலகம்:THE MUMMY (Part 2)

கல்லறைக்குள் உலகம்: THE MUMMY (Part-1)-ன் தொடர்ச்சி
இரண்டாவது கதவை கண்டுபிடித்ததும் கார்ட்டருக்கு தனது இத்தனை ஆண்டு முயற்சி நிச்சயம் வெற்றிபெற்று விடும் என்று தோன்றியது..சிறிது நேரத்தில் சிறிய துளை ஒன்றை கதவில் ஏற்படுத்தினார்.சூடான காற்று அவர் முகத்தில் உள்ளிருந்து வீசியது.பிறகு அந்த கதவை திறந்து உள்ளே நுழைந்த கார்ட்டரின் கண்கள் அகல விரிந்தன.இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரம் தேவைபட்டது.ஒரு மியூசியமே வைக்கும் அளவிற்கு அந்த அறை பொக்கிஷங்களால் நிரப்பபட்டிருந்தது.தங்கம் மற்றும் யானை தந்ததால் செய்யபட்ட கிரிடம்,ஆசனம்,தங்க முலாம் பூசப்பட்ட ரதம்,மன்னரின் இரண்டு சிலைகள் என பல பொருட்கள் அந்த அறையில் இருந்தன.

ஆனால் கார்ட்டர் எதிர்பார்த்த டூட் மன்னரின் உடலை மட்டும் காணவில்லை (டுத்தாங்கமெனை வரலாற்று ஆசிரியர்கள் ‘’டூட்’’ என செல்லமாக அழைக்கின்றனர்,நாமும் இனி அப்படியே அழைப்போம்).
Tut's golden Throne and Ivory Perfume Tin
அந்த அறை முழுவதும் கார்ட்டரும் அவரது உதவியாளர்களும் தேடி பார்த்தும் டூட் மன்னரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை,இதனால் அனைவருக்கும் பெரும் ஏமாற்றம்.இதற்கிடையில் ஓர் துர்சம்பவம் ஒன்று நடந்தது.லக்கி பேர்ட்(Lucky Bird) எனப்படும் பாடும் பறவை ஒன்றை கார்ட்டர் வளர்த்து வந்தார்.தான் எங்கு சென்றாலும் அதையும் உடன் எடுத்து செல்வது வழக்கம்.அப்படிதான் இன்றும் அவருடன் அந்த அறையில் இருந்தது.அப்போது எங்கிருந்தோ அங்கு வந்த ராஜ நாகம் ஒன்று அந்த பறவையை விழுங்கிவிட.,டூட் ஆவி தான் உள்ளே வரவேண்டாம் என இப்படி எச்சரிததாகவும்,அறையினுள்ளே நூற்றுக்கணக்கான ராஜ நாகங்கள் இருக்கலாம் என்றும் மறுநாள் தலைப்பு செய்தியாகவே பத்திரிக்கைகளில் வந்துவிட்டது.பயந்து போன வேலையாட்கள் பலர் வேலையை விட்டே நின்றுவிட்டனர்.இதனால் கார்ட்டர் புதிய ஆட்களை வரவழைத்து இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கவேண்டியதாகிற்று.

மறுநாள் மீண்டும் அந்த அறை சோதனையிடப்பட்டபோது மற்றொரு வாசல் தென்பட்டது..இன்னுமொரு அறை.இந்த அறையில் மன்னர் அடுத்த ஜென்மத்தில் அவர் வாழ்வதற்கு  தேவையான உடை,இசைகருவி,விளையாட்டு பொருட்கள்,ஆயுதங்கள் உட்பட பல பொருட்கள் இருந்தன.அனைத்திலும் டூட் பெயர் பொறிக்கபட்டிருந்தது (மறு ஜென்மத்தில் தன்னுடைய பெயரை அவர் மறந்துவிடுவாராம்,அதை ஞாபகபடுத்த தான் அனைத்திலும் பெயர் பொரிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.)இதிலும் மன்னரின் உடல் இல்லை.அந்த அறையை சலித்து எடுத்தனர்,

அப்போது சுவரின் ஒரு பகுதியில் எதோ பூசப்பட்டது போன்று இருப்பதை கார்ட்டர் கண்டுபிடித்தார்.அந்த இடத்தில் ஒவ்வொரு கல்லாக பெயர்த்து எடுத்தனர்.முதலில் தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டி பார்த்த கார்ட்டர்,பிறகு மெழுகுவர்த்தியுடன் தான் மட்டும் உள்ளே சென்றார்.சில நிமிடங்கள் நிசப்தம் மட்டுமே நிலவியது.பிறகு உள்ளிருந்து கார்ட்டர் கத்தும் ஓசை மட்டும் கேட்டது,பயத்தில் அல்ல,சந்தோஷத்தில்..இத்தனை ஆண்டுகள் எடுத்த முயற்சி வெற்றியடைந்ததின் வெளிப்பாடு.இது தான் அனைவரும் எதிர்பார்த்த மன்னர் அடக்கம் செய்ய பட்ட அறை.ஆனால் போன வேகத்தில் வெளியே வந்தார் கார்ட்டர்.

காரணம் எகிப்திய அரசாங்கத்தின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தான்.எந்த ஒரு மம்மியை கண்டுபிடித்தாலும் உடனே அரசிடம் தெரிவித்து,அனுமதி பெற்று அரசு அதிகாரிகளின் முன்னிலையில் தான் மம்மி இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்,அந்த அதிகாரிகள் போட்டோ எடுக்கும் முன் எதையும் தொடக்கூடாது.நவம்பர் 29ல் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் ஒவ்வொரு பொருளாக வெளியே எடுத்தனர்(மன்னர் அடக்கம் செய்யப்பட்ட அந்த அறையில் இருந்த பொருட்களை தவிர).ஒவ்வொரு பொருளின் எடை உயரம் போன்றவை கணக்கிடப்படும் பணி இரண்டு மாதங்களாக நடந்தது.

பிப்ரவரி17, 1923 ல் மக்கள் முன்னிலையில் டூட்டின் அடக்கம் செய்யப்பட்ட அறை திறக்க பட்டது.அந்த அறையின் நுழைவு வாயிலில் “எனது கல்லறையை மாசுபடுத்துபவர்கள்  நைல் நதி முதலை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக” என்று எழுதப்பட்டிருந்தது.இதையெல்லாம் கார்ட்டரும்,கார்நோவனும் சட்டை செய்யவில்லை,உள்ளே நுழைந்தனர்.அறையினுள்ளே 7 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட தங்க தகடால் மூடப்பட்ட மரபெட்டி ஒன்று இருந்தது.மேலும் அங்கு டூட் மன்னர் கருஞ்சிறுத்தையின் மேல் சவாரி செய்வதுபோல் சிலை உட்பட பல பொக்கிஷங்கள் இருந்ததன.
பிறகு அந்த மரப்பெட்டியின் மேல் பாகம் திறக்கப்பட்டது,திறந்தவுடன் உள்ளே மனித வடிவிலான கவசம் ஒன்று இருந்தது..அதை திறந்தால் அதே போல் இன்னொன்று என 3 கவசத்திற்கு பின்னால் மம்மியாக்க பட்ட 19 வயதில் இறந்த டூட் மன்னர் மீண்டும் இந்த உலகிற்கு  வெளிப்பட்டார்..

 இன்றைய டெக்னாலஜியையும் மிஞ்சும் மம்மியாக்கப்படும் மருத்துவ முறை, 10 வயதிலேயே அரியணை,தன் சகோதரியையே திருமணம் செய்த டூட் மன்னரின் திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை வரலாறு அடுத்த பதிவில் தொடரும்..

**எழுத்து: மணி மாணிக்கம்** 


Sunday, October 13, 2013

கல்லறைக்குள் உலகம்: THE MUMMY

வியக்கவைக்கும் அறிவியலும்,நம்பமுடியாத அமானுஷ்யங்களும் ஒன்றாக கலக்கும் எதுவுமே நமக்கு ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் கொடுப்பவையே. அது போன்ற ஒரு ஆச்சர்யம் தான் எகிப்தின் மம்மிகள்.ஒவ்வொரு கல்லறையின் பின்னாலும் எத்தனை எத்தனை வரலாறுகள், (கட்டு)கதைகள்,வினோதங்கள்3௦௦௦ ஆண்டுகள் ஆகியும் சிதையாமல் இருக்கும் உடல்,இன்னமும் மணம் மாறாமல் இருக்கும் வாசனை திரவியம் என பண்டைய எகிப்தியர்களின் அறிவியல் சார்ந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் நம் புருவத்தை சற்றே உயர்த்திவிடும்,’’மரணத்திற்கு பின் இன்னொரு வாழ்க்கை உண்டு'' என்பதில் எகிப்தியர்கள் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தனர்,இதன் வெளிப்பாடு தான் இந்த மம்மிகள்..மண்ணில் தோண்டி எடுத்த மம்மிகள் கூறும் வரலாற்றையும், பண்டைய எகிப்திய கலாச்சாரங்களையும் அறிந்து கொள்ள வாருங்கள், இந்த கல்லறை உலகிற்கு...!!

 பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் மம்மிகளை தேடி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தை குடைந்து கொண்டிருந்தனர்.அவர்களுள் முக்கியமானவர்கள் இங்கிலாந்தை சேர்ந்த டேவிஸ்(DAVIS) மற்றும் கார்ட்டர்(CARTER). 1902ம் ஆண்டு VALLEY OF KINGS பகுதியில் மம்மிக்களை தேடும் பணியை ஆரம்பித்த டேவிஸ், 1902 முதல் 1907 வரை அவர் கிட்டத்தட்ட முப்பது மம்மிக்களை கண்டுபிடித்தார்.ஆனால் அதில் இருந்த பொக்கிஷங்கள் அனைத்துமே கொள்ளையர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொள்ளையடிக்கப்பட்டும், கல்லறைகள் சிதைக்கப்பட்டும் இருந்தது. 1907 ம் ஆண்டு டேவிஸ் தங்கத்தகடு ஒன்றை கண்டுபிடித்தார்.அதில் ‘’மன்னர் டுத்தாங்கமென்’’ (KING TUTANKHAMEN) என்று எழுதப்பட்டிருந்தது.இதனால் டுத்தாங்கமென் என்ற மன்னனின் கல்லறை இந்த பகுதியில்தான் இருக்கவேண்டும் என்றும்,அதில் இதுவரை கிடைத்திராத பொக்கிஷங்கள் இருக்கலாம் என்ற புதுத்தெம்புடன் மீண்டும் தோண்ட ஆரம்பித்தார்.. டுத்தாங்கமென் பெயர் பொறித்த துணிகள்,ஆபரணங்கள் என்று கிடைத்த வண்ணம் இருந்தன,ஆனால் கல்லறை தான் கிடைத்தபாடில்லை.மூன்று கால்பந்து மைதானம் அளவுள்ள நிலத்தை 25 அடி ஆழதிற்கு வேலையாட்களை விட்டு தொண்டசெய்தார் டேவிஸ்.இறுதியில் இங்கு ஒன்றுமே இல்லை என்று 1914 ம் ஆண்டு ஏமாற்றத்துடன் இங்லாந்திற்கே சென்றுவிட்டார்.


அடுத்து இங்கு வந்தவர்தான் கார்ட்டர்.இந்த இடத்தில நிச்சயம் எதோ ஒன்று இருக்கவேண்டும் என்று அவரது மனபட்சி சொல்லியது போல..1917 முதல் டேவிஸ் விட்டதை கார்ட்டர் தொடர்ந்தார்..கார்ட்டரின் இந்த தேடுதலுக்கு ஆகும் செலவு அனைத்தையும் அவரது நண்பர் கார்நோவன் ஏற்றார்.1918 ல் ஏமாற்றம்,1919 ஏமாற்றம்,1920 ஏமாற்றம்,1921 ஏமாற்றம்.இதுவரை ஒரு மண்ணும் கிடைக்காததால் நொந்து போன...மன்னிக்கவும்...’மண்ணைத்தவிர வேறேதும் கிடைக்காததால் நொந்து போன’ கார்நோவன் இதற்கு மேல் இந்த வெட்டி வேலைக்கு பணம் தரமுடியாது என்று இங்கிலாந்ததிலிருந்து தந்தி அனுப்பிவிட்டார்.ஆனால் கார்ட்டருக்கு ஏதோ ஒரு அசாத்திய நம்பிக்கை இருந்ததது.கார்நோவனை சந்தித்து இன்னும் ஒரு வருடம் மட்டும் உதவும் மாறும்,அப்படி இந்த வருடத்தில் எதுவும் கிடைக்கவில்லையென்றால் இதுவரை ஆன மொத்த செலவுக்கான பணத்தையும் எப்படியாவது திருப்பி தந்துவிடுவதாகவும் கூறிவிட்டு வந்தார் கார்ட்டர்.
''டுத்தாங்கமெனை தேடுகிறார்கள்''
இதனால் வேலையாட்களை மேலும் துரிதமாக தோண்டசெய்தார். நவம்பர் 4,1922...வேலையாட்களுக்கு தண்ணீர் கொடுக்க சென்ற ஒரு சிறுவன் பள்ளம் தோண்டும் பகுதிக்குள் இறங்கினான்.அப்போது கால் இடறி அவன் கீழே விழ,விழுந்த இடத்தில் ’டங்’ என்று நூதன ஒலி எழுந்தது.அவன் அந்த இடத்தை மெல்ல துடைத்து பார்த்தான்.எதோ அதில் எழுதிருந்தது..உடனே அந்த சிறுவன் ஓடி போய் வேலையாட்களிடம் கூற,அவர்கள் கார்ட்டரிடம் தெரிவித்தனர்.அவ்வளவுதான் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார் கார்ட்டர்.மெல்ல மெல்ல அந்த பகுதியை துடைத்தனர்.இறுதியில் ஒரு கதவு வெளிப்பட்டது,அதில் ‘’ டுத்தாங்கமென் ’’ என்று எழுதியிருந்தது.அந்த கதவில் துளையிட்டு திறந்தார் கார்ட்டர். திறந்தவுடன் ஒரு குகை ஆரம்பித்தது..சிறிது சிறிதாக,மிக கவனமாக குகையை குடைந்தனர், 22 நாட்களுக்கு பிறகு ,நவம்பர் 26 ல் மற்றுமோர் கதவு வெளிப்பட்டது. இரண்டுகதவுகளுக்கும் இடையேயான தூரம் 30m.இரண்டாவதுகதவிலும் ‘’ டுத்தாங்கமென் ’’ என்று எழுதியிருந்தது.கார்ட்டர் எதிர்பார்த்ததும், எதிர்பார்க்காததும் இந்த இரண்டாம் கதவின் பின்னால் இவர்களுக்காக காத்திருந்தன.

அச்சுறுத்திய டுத்தாங்கமென் ஆவி...உறைந்துபோன கார்ட்டர்...கிடைத்த 

பொக்கிஷம்...இவை பற்றி அடுத்த பதிவில் தொடரும்.

Source Books:Mummies and its Treasures,Mummies:the secret of Pharaohs,Tomb of King.  


**எழுத்து: மணி மாணிக்கம்**