Tuesday, November 5, 2013

கல்லறைக்குள் உலகம்:THE MUMMY (THE END)



அகேநேடனை கி.மு 1334 ம் ஆண்டு திடீரென மரணம் தழுவியது,இவர் இறந்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை.இதனால் இவரின் வாரிசு டூத்தாங்மென் அடுத்த அரசராக அரியணை ஏறினார்.அப்போது வயது ஒன்பது தான்.அரசர் இவர் தான் என்றாலும் இளவயது காரணமாக உண்மையான அதிகாரம் என்னவோ மெய்க்காப்பாளர் அய்(Ay) என்பவரிடமும்,டூட்டின் பெரியம்மா நெபர்டிடியிடமும்(Nefertiti)(அப்பா அகேநேடனின் முதல் மனைவி) தான் இருந்தது.ஷோகேசில் இருக்கும் பொம்மை போலதான் டூட் அரியணையை அலங்கரித்தார்.அரசரான சில மாதங்களில் திருமண வைபவம் நடந்தேறியது.
மனைவியுடன் டூட்
மணமகள் யாருமில்லை தன் சகோதரியே தான்,பெயர் அங்கேசெநமன்(Ankhesenamun).டூட்டின் அப்பாவும் அம்மாவும் கூட உடன்பிறந்த அண்ணன்-தங்கையாக இருந்து மணமக்களாக ஆனவர்கள் தான்.இந்த கலாச்சார வழக்கம் நமக்கு வேண்டுமானால் விநோதமாகவும்,சங்கடமாகவும் இருக்கலாம்.ஆனால் அக்கால எகிப்திய நம்பிக்கையின்படி அரசபரம்பரை கடவுளின் புனித ரத்தத்தில் உருவானது என்றும்,இதனால் குடும்பத்தை தாண்டி வேறு உறவுகளில் திருமணம் செய்தால் அந்த புனிதம் கெட்டுவிடும் என்றும் எண்ணியே தன் சகோதர-சகோதரிகளையே திருமணம் செய்து வந்துள்ளனர்.

என்னதான் அரசனாக இருந்தாலும்,திருமணம் ஆகியிருந்தாலும், டூட்டிடம் அந்த குழந்தைத்தனமும்,விளையாட்டுதனமும் அவரை விட்டு போகவில்லை.செநெட் எனப்படும் ஒரு வகை விளையாட்டை அவர் விரும்பி விளையாடுவாராம்.ஒரு கையில் வில்லும் மறு கையில் செனட் போர்டும்(செனெட் என்பது நம்ம ஊர் பல்லாங்குழி மாதிரி) அவரிடம் எப்போதும் இருக்கும்.இவ்வளவு ஏன் சில நேரங்களில் அரியணையில் இருக்கும்போதே மந்திகளுடன் விளையாட ஆரம்பித்து விடுவாராம்.அதற்காக இவரை இம்சை அரசன் புலிகேசி லிஸ்டிலும் சேர்த்துவிட முடியாது.
போர்களத்தில் டுத்தாங்கமென்
இவரது காலத்தில் அப்பா செய்த மதம் ரீதியான தவறுகளை சரிசெய்து மீண்டும் சூரியகடவுளின் கோவிலையும் கட்டிகொடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்றார்.நூபியன்களுக்கு(பக்கத்து தேசம்) எதிராக யுத்தம் செய்து வெற்றிபெற்றார்.வணிகத்தை பெருக்குவதர்க்கு தேவையான புதிய தரைவழித் தடங்களை ஏற்படுத்தினார்.எல்லாவற்றிற்கும் மேலாக தலைநகரத்தை மெம்பிஸ்க்கு(Memphis) மாற்றினார்(இவரது அப்பா அரசராய் இருந்தபோது காலம் காலமாக தலைநகரமாக இருந்த மெம்பிஸை அழித்து,அமர்நா என்ற புதிய தலைநகரை ஏற்படுத்தினார்,இந்த செயல் மக்களிடம் வெறுப்பை அதிகரித்தன).எதிர்காலத்தில் உலகம் போற்றும் மன்னராய் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டுத்தாங்கமென் கி.மு 1325ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார்.இவர் இறந்ததற்கான காரணம் சரிவர தெரியவில்லை. 2010ல் நடந்த DNA ஆய்வின் முடிவில் மலேரியாவால் இறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
மேலும் இவரது காலில் எலும்பு முறிவும்,தலையில் அடிபட்டதற்கான அடையாளங்களும் இருப்பதால் டூட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கின்றனர்.ஒருவேளை அப்படி இவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்.?டூட்டின் மனைவியான அங்கேசெநமனுக்கும்,அவரது மெய்க்காப்பாளர் அய்க்கும்(AY) இடையே கள்ளகாதல் இருந்ததாகவும்,இதற்கு தொல்லையாக டூட் இருந்ததால் கொலைசெய்யபட்டார் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.எது எப்படியோ டுத்தாங்கமேன் இறந்தபிறகு அங்கேசெநமனுக்கும் அய்க்கும் சீரும்சிறப்புமாக திருமணம் நடந்தது.இதன்பிறகு இந்த இருவரை பற்றியும் எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை.        

டுத்தாங்கமென் கால வரலாற்றில் எத்தனையோ புகழ் பெற்ற மன்னர்கள் இருந்தாலும்,இவரை பற்றி மட்டும் குறிப்பிட்டு சொல்லக்காரணம்,மண்ணில் தோண்டியெடுத்த மம்மிகள் அனைத்தும் சிதைந்து போயும்,திருடர்களால் அழிக்கப்பட்டும்தான் கிடைத்தன.ஆனால் டுத்தாங்கமெனின் கல்லறை மட்டும் தான் பொக்கிஷங்களுடன் முழுதாக கண்டெடுக்கப்பட்டது.இவர் வாழ்ந்தது 19 ஆண்டுகள் தான் என்றாலும் 3300 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தின் பழம்பெருமை,கலாச்சாரம்,நாகரீகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றை இன்று நாம் தெளிவாக தெரிந்துகொள்ள ஒரு நூலகம் போல் உதவியது இவரது கல்லறை என கூறலாம்.லண்டன் மியூசியத்தில் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இன்றும் கதைசொல்லிகொண்டிருக்கிறார் இந்த மரியான் டுத்தாங்கமென்.

இத்துடன் கல்லறைக்குள் உலகம்:THE MUMMYமுடிவடைகிறது,நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்திருக்குமென நம்புகிறேன்.இத்தொடரை தொடர்ந்து படித்துவந்தும்,நிறைகுறைகளை கூறியும்,பாராட்டி ஊக்கபடுத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

எழுத்து : மணி மாணிக்கம்







Sunday, November 3, 2013

Do not disturb my circles

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்..
நீ என்னை நீங்கிச் சென்றாலே...
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்..
நீ எந்தன் பக்கம் நின்றாலே...
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி...

இதையெல்லாம் எழுதுனது நம்மூரு கவிஞர்கள் வாலியோ, வைரமுத்தோ இல்லைங்க.. பின்ன சேக்ஸ்பியர்ரானு கேட்கிறீங்களா ? அவரும் இல்ல..! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...!!

நேரம்கிறது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம் மாறுபடும்கிறதையும், காலம்னு தனியே ஒன்று கிடையாது என்கிற அவருடைய சார்பியல் தத்துவத்தையும் (Relativity Theory) எளிமையா புரியவைக்க 1905ல ஐன்ஸ்டீன் சொன்னதுதான் மேலே சொன்ன கவி வரிகள்..!

ஆச்சிர்யமா இருக்குல்ல. அறிவியல் மட்டும் ஆச்சிர்யம் இல்லைங்க, சில அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கையும் ஆச்சிர்யம்தான். அப்படி ஒரு ஆச்சிர்யமான ஆளுதான் இன்னைக்கு நாம பார்க்கப்போற கிரேக்க மேதை, தனிமனித ராணுவம் "ஆர்க்கிமிடீஸ்". "யுரேகா..!" இவர அறிமுகப்படுத்த இந்த ஒரு வார்த்தை போதும். ஒரு பரபரப்பான திரைக்கதைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டது ஆர்க்கிமிடீஸ்ன் வாழ்க்கை.

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் சைராக்கஸ் என்ற துறைமுக நகரை (இன்றைய இத்தாலிய நகரம்) அரசர் இரண்டாம் ஹியரோ சீரும் சிறப்பும்மாக ஆட்சி செய்து வந்தார். அக்பர் - பீர்பால், கிருஷ்ணதேவராயர் - தெனாலிராமன் மாதிரி ஹியரோ ராஜாக்கு ஆர்க்கிமிடீஸ் சிறந்த ஆலோசகரா திகழ்ந்தார். ஒருநாள் அரசர் ஒரு தங்கக்கட்டியை அரண்மனை கொல்லனிடம் கொடுத்து அழகான கிரீடம் செய்து தருமாறு கேட்டார். சில நாட்களுக்குப் பிறகு வேலையை முடித்த அரண்மனை கொல்லனும் புதிய கிரீடத்தை அரசரிடம் சமர்பித்தார். அரசருக்கு புதிய கிரீடத்தின் அழகு நிறைவை தந்தாலும் அதன் வண்ணம் தங்கம் போல் அல்லாது இருப்பது கண்டார். கொல்லனை விசாரித்ததில் அரசர் கொடுத்த தங்கக்கட்டியின் எடையும், கிரீடத்தின் எடையும் சமமாகத்தானே உள்ளது என்று கூறி சமாளித்தார். இப்போது அரசருக்கு இருப்பது ரெண்டே வழி. ஒன்று கிரீடத்தை உருக்கி தங்கத்தை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அளவை சரிபார்ப்பது அல்லது வழக்கை ஆர்க்கிமிடீஸ்ஸிடம் ஒப்படைப்பது. வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, கிரீடத்தை சிதைக்காமல் தங்கத்தின் எடையையும், தரத்தையும் சரிப்பார்க்குமாறு அரசர் ஆர்க்கிமிடீஸ்ஸிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலேயே தனது இரவையும் பகலையும் செலவிட்டார் ஆர்க்கிமிடீஸ். 'பார்த்த இடத்திலெல்லாம் உனைப்போல் பாவை தெரியுதடி' - பார்த்த இடத்திலெல்லாம் பாரதிக்கு பாவை தெரிந்தது போல ஆர்க்கிமிடீஸ்க்கு கிரீடப்பிரச்னை தெரிந்தது. நாட்கள் சென்றன. ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒருபகல்ப்பொழுதில் சோர்வுடன் நிரம்பியிருந்த குளியல்தொட்டியில் குளிப்பதற்க்காக இறங்கினார். நீர் வெளியே சிந்தத்தொடங்கியது. அந்த கணம், ஐசக் நியுட்டன் முன்னால் ஆப்பிள் விழுந்த அந்த கணம். ஆம், அந்த கணப்பொழுதில்தான் "ஆர்க்கிமிடீஸ் தத்துவம்" என்று பரவலாக அறியப்படும் பத்து மதிப்பெண் கேள்வியும் அதற்க்கான பதிலும் பிறந்தது.

"திரவத்தில் அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அத்திரவம் செலுத்தும் மிதப்பு விசை அப்பொருளினால் இடப்பெயர்க்கப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்"

-ஆர்க்கிமிடீஸ்ன் மூளையில் இது உதித்த அந்த கணம் மனிதர் யோகநிலையை அடைந்து குளியல்தொட்டியில் இருந்து குதித்து ஆனந்தமாக "யுரேகா..யுரேகா..!" (கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்..)என்று கத்தியப்படி ஆடையில்லாமல் தெருவில் இறங்கி அரண்மனையை நோக்கி ஓட ஆரம்பித்தார்..!



கிரீடத்தில் தங்கத்தின் எடை குறைவாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு வெள்ளி கலந்தது உறுதிசெய்யப்பட்டது. கொல்லனும் உண்மையை ஒப்புக்கொண்டு சிறைக்கு அனுப்பப்பட்டான்.

பின்பு நெம்புகோலின் தத்துவத்தையும் கண்டறிந்தார். அவருக்கு முன்பே அனுபவரீதியாக பலர் நெம்புகோலை உபயோகித்து வந்தாலும், அதை சரியாக இயக்கும் முறையை கணித சமன்பாடுகளில் நிறுவி உலகுக்கு தெரிவித்தார்.

"நிற்பதற்கு ஓர் இடம் கொப்பீர்களானால் இந்தப் பூமியையே அசைத்துக் காட்டுகிறேன்" என்று சவால் விடுத்தார் அந்த மேதை.



இவ்வாறாக அவருடைய புகழ் நாலாபக்கமும் பரவ தொடங்கிய நேரம், சைராக்கஸ் நகரின் மீது ரோமானிய பேரரசு தளபதி மார்செல் தலைமையில் கடல்மார்க்கமாக படையெடுத்து வந்தது. இதை அறிந்த சைராக்கஸ் அரசர் இரண்டாம் ஹியரோ தலைமறைவானார்.நகரை காப்பாற்றும் பொறுப்பு ஆர்க்கிமிடீஸ்ஸிடம் வந்தது. தன்னுடைய அறிவியல் அறிவு, அந்நகரின் வலுவான கோட்டை, சொற்ப படைவீரர்கள் இதுதான் ஆர்க்கிமிடீஸ்ஸின் அப்போதைய நிலைமை.

வரலாறு எத்தனையோ கொடூரமான போர்களையும், முற்றுகைகளையும் சந்தித்துள்ளது. ஆனால் ஒரு பேரரசின் போர்க்கப்பல்களுக்கு எதிராக ஒரு தனி மனிதனின் அறிவியல் அறிவு நிறுத்திவைக்கப்பட்டது இப்போர்க்களத்தில் மட்டுமே.

போர்க்கப்பல்கள் நகரை நெருங்குவதை அறிந்த ஆர்க்கிமிடீஸ் நகரின் கோட்டை கதவுகளை அடைக்குமாறு ஆணையிட்டார். சில முன்னேற்பாடுகளை செய்தார். எதிரி அருகில் வரும்வரை காத்திருந்தார். கப்பல்கள் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டன. தளபதி மார்செல் படை வீரர்களை கரையில் இறங்கி கோட்டை கதவுகளை உடைக்குமாறு ஆணையிட்டார். கதவுகளை உடைக்கும் ஏற்பாடுகளுடன் வீரர்களும் கோட்டையை நெருங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணிலிருந்து விண்கற்கள் சீறிப்பாய்ந்து வந்து வீரர்களை நசுக்க தொடங்கியது. இடைவிடாத விண்கற்களின் மழை. எதிர்பாராததும், முன்னெப்போதும் கேள்விப்பட்ராததுமான இவ்வகை தாக்குதலை சமாளிக்க முடியாமல் வீரர்கள் சிதறி ஓடினார்கள். தப்பிப்பிழைத்தவர்கள் மீண்டும் கப்பலில் தஞ்சமடைந்தார்கள். விழுந்த கற்களின் ஒன்றைக்கூட அசைக்க முடியாதது கண்டு தளபதி மார்செல் திகைத்தார். அவருக்கு ஆர்க்கிமிடீஸ்ன் நெம்புகோலின் தத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீரர்கள் தரையில் கால்வைக்க வேண்டியது, விண்கற்களின் மழை, திரும்பி ஓட்டம் இப்படியே சில நாட்கள் முற்றுகைலேயே சென்றது.



ரோமானிய வீரர்களுக்கு கப்பலிலும் நிம்மதியில்லை. ஓர் இரவு கோட்டையிலிருந்து ராட்ஷச கை போன்ற அமைப்பு நீண்டு வந்து கப்பலை அந்திரத்தில் அப்படியே தூக்கி கடலில் அமுத்தியது. வீரர்கள் இதனை பில்லி, சூனிய, மந்திர வேலைகள் என்றே நம்பி பயந்தனர். அவர்களுக்கு ஆர்க்கிமிடீஸ்ன் கிரேன் போன்ற அமைப்புகள் தெரிந்திருக்க நியாயம்மில்லை. தொடர்ந்து வந்த இரவுகளில் மேலும் பல கப்பல்கள் கடலில் மூழ்கின. தளபதி மார்செல்ன் கட்டளைக்கிணங்க இரவிலும் தூங்காமல் வீரர்கள் காவலில் இருந்து முற்றுகையை தொடர்ந்தனர்.



தொடர்ந்து வந்த ஒரு நாளில் வழக்கம்போல் பொழுது புலர்ந்து சூரியன் உதிக்க தொடங்கியது. சூழ்ந்திருந்த கப்பல்களில் ஒரு கப்பலில் மட்டும் சூரிய வெப்பம் அதிகமாக இருப்பது போல் உணர்ந்தனர். சிறிது நேரத்தில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இது நிச்சயம் ஏவப்பட்ட சூனியக்காரியின் வேலைதான் என்று உறுதியாக நம்ப தொடங்கினர் ரோமானிய வீரர்கள். ஆர்க்கிமிடீஸ் பெரிய பெரிய கண்ணாடிகளை உபயோகித்து சூரிய ஒளியை குவித்து கப்பலின் மேல் விழ செய்தார். கப்பலின் அடித்தளத்தில் தார் பூசப்பட்ட அந்த கால பாய்மர கப்பல்கள் எளிதில் தீக்கு இரையாகின.


இப்படியே ரோமானிய படையின் பெரும் பகுதியை அழித்தார் ஆர்க்கிமிடீஸ். மூன்று ஆண்டுகள் முற்றுகையிலேயே கழிந்தது.

பொறுமை இழந்த தளபதி மார்செல், "பொறுத்தது போதும்.. தாக்குதலை ஆரம்பியுங்கள்.. உயிர் பிழைத்தவர்கள் கோட்டை கதவுகளை உடைத்தெரியுங்கள்" என்று ஆணையிட்டார். பல இழப்புகளுக்குப் பிறகு சைராக்கஸ் நகர் ரோமானியர்கள் வசம் ஆனது. நகருக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக தளபதி மார்செல், ஆர்க்கிமிடீஸ் பற்றி கேள்விப்பட்டு அவரை உயிருடன் பிடித்து வருமாறு ஒரு படை வீரனை அனுப்பினார். படை வீரன் வந்து ஆர்க்கிமிடீஸ்ஸிடம் விசயத்தை சொல்லி வருமாறு அழைத்தான். அவர் அப்போது தரையில் பலவிதமான வரைபடங்களை வட்டம், கோளம் என வரைந்து கணித சமன்பாடுகளாக நிறுவிக்கொண்டு இருந்தார். ஆதலால், "இல்லை.. என்னால் இப்போது வரமுடியாது.. நான் இந்த சமன்பாடுகளை முடித்து தீர்வு காண வேண்டும். So..Do not disturb my circles!" என்றார். கோபமடைந்த படை வீரன் தன் வாளால் ஆர்க்கிமிடீஸ்ன் தலையை கொய்து தளபதி மார்செல்லிடம் கொடுத்தான்.



அறிஞர்கள் அதிகாரத்தின் முன்பு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதனை வரலாற்று சாட்சியாக ஆர்க்கிமிடீஸ்ன் ரத்தம் பதிவு செய்தது.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...

-உங்கள் பாலா-