நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்..
நீ என்னை நீங்கிச் சென்றாலே...
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்..
நீ எந்தன் பக்கம் நின்றாலே...
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி...
இதையெல்லாம் எழுதுனது நம்மூரு கவிஞர்கள் வாலியோ, வைரமுத்தோ இல்லைங்க.. பின்ன சேக்ஸ்பியர்ரானு கேட்கிறீங்களா ? அவரும் இல்ல..!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...!!
நேரம்கிறது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம் மாறுபடும்கிறதையும், காலம்னு தனியே ஒன்று கிடையாது என்கிற அவருடைய சார்பியல் தத்துவத்தையும் (
Relativity Theory) எளிமையா புரியவைக்க 1905ல ஐன்ஸ்டீன் சொன்னதுதான் மேலே சொன்ன கவி வரிகள்..!
ஆச்சிர்யமா இருக்குல்ல. அறிவியல் மட்டும் ஆச்சிர்யம் இல்லைங்க, சில அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கையும் ஆச்சிர்யம்தான். அப்படி ஒரு ஆச்சிர்யமான ஆளுதான் இன்னைக்கு நாம பார்க்கப்போற கிரேக்க மேதை, தனிமனித ராணுவம் "ஆர்க்கிமிடீஸ்". "யுரேகா..!" இவர அறிமுகப்படுத்த இந்த ஒரு வார்த்தை போதும். ஒரு பரபரப்பான திரைக்கதைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டது ஆர்க்கிமிடீஸ்ன் வாழ்க்கை.
சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் சைராக்கஸ் என்ற துறைமுக நகரை (இன்றைய இத்தாலிய நகரம்) அரசர் இரண்டாம் ஹியரோ சீரும் சிறப்பும்மாக ஆட்சி செய்து வந்தார். அக்பர் - பீர்பால், கிருஷ்ணதேவராயர் - தெனாலிராமன் மாதிரி ஹியரோ ராஜாக்கு ஆர்க்கிமிடீஸ் சிறந்த ஆலோசகரா திகழ்ந்தார். ஒருநாள் அரசர் ஒரு தங்கக்கட்டியை அரண்மனை கொல்லனிடம் கொடுத்து அழகான கிரீடம் செய்து தருமாறு கேட்டார். சில நாட்களுக்குப் பிறகு வேலையை முடித்த அரண்மனை கொல்லனும் புதிய கிரீடத்தை அரசரிடம் சமர்பித்தார். அரசருக்கு புதிய கிரீடத்தின் அழகு நிறைவை தந்தாலும் அதன் வண்ணம் தங்கம் போல் அல்லாது இருப்பது கண்டார். கொல்லனை விசாரித்ததில் அரசர் கொடுத்த தங்கக்கட்டியின் எடையும், கிரீடத்தின் எடையும் சமமாகத்தானே உள்ளது என்று கூறி சமாளித்தார். இப்போது அரசருக்கு இருப்பது ரெண்டே வழி. ஒன்று கிரீடத்தை உருக்கி தங்கத்தை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அளவை சரிபார்ப்பது அல்லது வழக்கை ஆர்க்கிமிடீஸ்ஸிடம் ஒப்படைப்பது. வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, கிரீடத்தை சிதைக்காமல் தங்கத்தின் எடையையும், தரத்தையும் சரிப்பார்க்குமாறு அரசர் ஆர்க்கிமிடீஸ்ஸிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலேயே தனது இரவையும் பகலையும் செலவிட்டார் ஆர்க்கிமிடீஸ். 'பார்த்த இடத்திலெல்லாம் உனைப்போல் பாவை தெரியுதடி' - பார்த்த இடத்திலெல்லாம் பாரதிக்கு பாவை தெரிந்தது போல ஆர்க்கிமிடீஸ்க்கு கிரீடப்பிரச்னை தெரிந்தது. நாட்கள் சென்றன. ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒருபகல்ப்பொழுதில் சோர்வுடன் நிரம்பியிருந்த குளியல்தொட்டியில் குளிப்பதற்க்காக இறங்கினார். நீர் வெளியே சிந்தத்தொடங்கியது. அந்த கணம், ஐசக் நியுட்டன் முன்னால் ஆப்பிள் விழுந்த அந்த கணம். ஆம், அந்த கணப்பொழுதில்தான் "
ஆர்க்கிமிடீஸ் தத்துவம்" என்று பரவலாக அறியப்படும் பத்து மதிப்பெண் கேள்வியும் அதற்க்கான பதிலும் பிறந்தது.
"திரவத்தில் அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அத்திரவம் செலுத்தும் மிதப்பு விசை அப்பொருளினால் இடப்பெயர்க்கப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்"
-ஆர்க்கிமிடீஸ்ன் மூளையில் இது உதித்த அந்த கணம் மனிதர் யோகநிலையை அடைந்து குளியல்தொட்டியில் இருந்து குதித்து ஆனந்தமாக "யுரேகா..யுரேகா..!" (கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்..)என்று கத்தியப்படி ஆடையில்லாமல் தெருவில் இறங்கி அரண்மனையை நோக்கி ஓட ஆரம்பித்தார்..!
கிரீடத்தில் தங்கத்தின் எடை குறைவாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு வெள்ளி கலந்தது உறுதிசெய்யப்பட்டது. கொல்லனும் உண்மையை ஒப்புக்கொண்டு சிறைக்கு அனுப்பப்பட்டான்.
பின்பு நெம்புகோலின் தத்துவத்தையும் கண்டறிந்தார். அவருக்கு முன்பே அனுபவரீதியாக பலர் நெம்புகோலை உபயோகித்து வந்தாலும், அதை சரியாக இயக்கும் முறையை கணித சமன்பாடுகளில் நிறுவி உலகுக்கு தெரிவித்தார்.
"நிற்பதற்கு ஓர் இடம் கொப்பீர்களானால் இந்தப் பூமியையே அசைத்துக் காட்டுகிறேன்" என்று சவால் விடுத்தார் அந்த மேதை.
இவ்வாறாக அவருடைய புகழ் நாலாபக்கமும் பரவ தொடங்கிய நேரம், சைராக்கஸ் நகரின் மீது ரோமானிய பேரரசு தளபதி மார்செல் தலைமையில் கடல்மார்க்கமாக படையெடுத்து வந்தது. இதை அறிந்த சைராக்கஸ் அரசர் இரண்டாம் ஹியரோ தலைமறைவானார்.நகரை காப்பாற்றும் பொறுப்பு ஆர்க்கிமிடீஸ்ஸிடம் வந்தது. தன்னுடைய அறிவியல் அறிவு, அந்நகரின் வலுவான கோட்டை, சொற்ப படைவீரர்கள் இதுதான் ஆர்க்கிமிடீஸ்ஸின் அப்போதைய நிலைமை.
வரலாறு எத்தனையோ கொடூரமான போர்களையும், முற்றுகைகளையும் சந்தித்துள்ளது. ஆனால் ஒரு பேரரசின் போர்க்கப்பல்களுக்கு எதிராக ஒரு தனி மனிதனின் அறிவியல் அறிவு நிறுத்திவைக்கப்பட்டது இப்போர்க்களத்தில் மட்டுமே.
போர்க்கப்பல்கள் நகரை நெருங்குவதை அறிந்த ஆர்க்கிமிடீஸ் நகரின் கோட்டை கதவுகளை அடைக்குமாறு ஆணையிட்டார். சில முன்னேற்பாடுகளை செய்தார். எதிரி அருகில் வரும்வரை காத்திருந்தார். கப்பல்கள் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டன. தளபதி மார்செல் படை வீரர்களை கரையில் இறங்கி கோட்டை கதவுகளை உடைக்குமாறு ஆணையிட்டார். கதவுகளை உடைக்கும் ஏற்பாடுகளுடன் வீரர்களும் கோட்டையை நெருங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணிலிருந்து விண்கற்கள் சீறிப்பாய்ந்து வந்து வீரர்களை நசுக்க தொடங்கியது. இடைவிடாத விண்கற்களின் மழை. எதிர்பாராததும், முன்னெப்போதும் கேள்விப்பட்ராததுமான இவ்வகை தாக்குதலை சமாளிக்க முடியாமல் வீரர்கள் சிதறி ஓடினார்கள். தப்பிப்பிழைத்தவர்கள் மீண்டும் கப்பலில் தஞ்சமடைந்தார்கள். விழுந்த கற்களின் ஒன்றைக்கூட அசைக்க முடியாதது கண்டு தளபதி மார்செல் திகைத்தார். அவருக்கு ஆர்க்கிமிடீஸ்ன் நெம்புகோலின் தத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீரர்கள் தரையில் கால்வைக்க வேண்டியது, விண்கற்களின் மழை, திரும்பி ஓட்டம் இப்படியே சில நாட்கள் முற்றுகைலேயே சென்றது.

ரோமானிய வீரர்களுக்கு கப்பலிலும் நிம்மதியில்லை. ஓர் இரவு கோட்டையிலிருந்து ராட்ஷச கை போன்ற அமைப்பு நீண்டு வந்து கப்பலை அந்திரத்தில் அப்படியே தூக்கி கடலில் அமுத்தியது. வீரர்கள் இதனை பில்லி, சூனிய, மந்திர வேலைகள் என்றே நம்பி பயந்தனர். அவர்களுக்கு ஆர்க்கிமிடீஸ்ன் கிரேன் போன்ற அமைப்புகள் தெரிந்திருக்க நியாயம்மில்லை. தொடர்ந்து வந்த இரவுகளில் மேலும் பல கப்பல்கள் கடலில் மூழ்கின. தளபதி மார்செல்ன் கட்டளைக்கிணங்க இரவிலும் தூங்காமல் வீரர்கள் காவலில் இருந்து முற்றுகையை தொடர்ந்தனர்.
தொடர்ந்து வந்த ஒரு நாளில் வழக்கம்போல் பொழுது புலர்ந்து சூரியன் உதிக்க தொடங்கியது. சூழ்ந்திருந்த கப்பல்களில் ஒரு கப்பலில் மட்டும் சூரிய வெப்பம் அதிகமாக இருப்பது போல் உணர்ந்தனர். சிறிது நேரத்தில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இது நிச்சயம் ஏவப்பட்ட சூனியக்காரியின் வேலைதான் என்று உறுதியாக நம்ப தொடங்கினர் ரோமானிய வீரர்கள். ஆர்க்கிமிடீஸ் பெரிய பெரிய கண்ணாடிகளை உபயோகித்து சூரிய ஒளியை குவித்து கப்பலின் மேல் விழ செய்தார். கப்பலின் அடித்தளத்தில் தார் பூசப்பட்ட அந்த கால பாய்மர கப்பல்கள் எளிதில் தீக்கு இரையாகின.
இப்படியே ரோமானிய படையின் பெரும் பகுதியை அழித்தார் ஆர்க்கிமிடீஸ். மூன்று ஆண்டுகள் முற்றுகையிலேயே கழிந்தது.
பொறுமை இழந்த தளபதி மார்செல், "பொறுத்தது போதும்.. தாக்குதலை ஆரம்பியுங்கள்.. உயிர் பிழைத்தவர்கள் கோட்டை கதவுகளை உடைத்தெரியுங்கள்" என்று ஆணையிட்டார். பல இழப்புகளுக்குப் பிறகு சைராக்கஸ் நகர் ரோமானியர்கள் வசம் ஆனது. நகருக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக தளபதி மார்செல், ஆர்க்கிமிடீஸ் பற்றி கேள்விப்பட்டு அவரை உயிருடன் பிடித்து வருமாறு ஒரு படை வீரனை அனுப்பினார். படை வீரன் வந்து ஆர்க்கிமிடீஸ்ஸிடம் விசயத்தை சொல்லி வருமாறு அழைத்தான். அவர் அப்போது தரையில் பலவிதமான வரைபடங்களை வட்டம், கோளம் என வரைந்து கணித சமன்பாடுகளாக நிறுவிக்கொண்டு இருந்தார். ஆதலால், "இல்லை.. என்னால் இப்போது வரமுடியாது.. நான் இந்த சமன்பாடுகளை முடித்து தீர்வு காண வேண்டும்.
So..Do not disturb my circles!" என்றார். கோபமடைந்த படை வீரன் தன் வாளால் ஆர்க்கிமிடீஸ்ன் தலையை கொய்து தளபதி மார்செல்லிடம் கொடுத்தான்.
அறிஞர்கள் அதிகாரத்தின் முன்பு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதனை வரலாற்று சாட்சியாக ஆர்க்கிமிடீஸ்ன் ரத்தம் பதிவு செய்தது.
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...
-உங்கள் பாலா-